இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அம் தேதி நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
கடத்தப்பட்ட விமானம் 170 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் தாலீபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்துக்கு சென்றது. இந்திய சிறைச்சாலைகளில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகள் நிபந்தனை விடுத்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு மசூத் அசார் உட்பட 3 பயங்கரவாதிகளை ஒப்படைத்துவிட்டு பயணிகளையும் விமான ஊழியர்களையும் மீட்டது. இதனிடையே நாட்டையே உலுக்கிய இந்த விமான கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஜாகூர் இப்ராஹிம் பாகிஸ்தானில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கராச்சியில் ஜாகூர் இப்ராஹிம் பர்னிச்சர் கடை நடத்தி வந்த நிலையில் மர்ம நபர்களால் ஜாகூர் இப்ராஹிம் சுடப்பட்டு சிகிச்சைக்காக மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை என கூறியுள்ள கராச்சி போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.