நான் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்திருந்தால் அவரை எடுத்திருக்க மாட்டேன் - ஓபனாக சொன்ன சேவாக்!
பஞ்சாப் நிர்வாகத்தில் நான் இருந்திருந்தால் சாம் கர்ரனை எடுத்திருக்க மாட்டேன் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.
அவரை எடுத்திருக்க மாட்டேன்
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி எதிர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 142 ரன்களை குவித்தனர். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதை சேஸ் செய்த குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய போட்டிகளில் 6வது முறை தோல்வியை தழுவி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஓபனாக சொன்ன சேவாக்
முன்னதாக இந்த அணியின் கேப்டனாக செயல்பட ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதில் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் நிர்வாகத்தில் நான் இருந்திருந்தால் சாம் கர்ரனை அணியில் எடுத்திருக்க மாட்டேன் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஒருவேளை நான் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்தால் அவரை எனது அணியில் கூட எடுத்திருக்க மாட்டேன். பேட்டிங் ஆல் ரவுண்டர் அல்லது பவுலிங் ஆல் ரவுண்டர் ஆகிய எந்த வேலைக்கும் அவரை எடுத்திருக்க மாட்டேன். கொஞ்சமாக மட்டும் பந்து வீசி, பேட்டிங் செய்யும் அவரைப் போன்ற வீரரால் எந்த பயனுமில்லை.
ஒன்று நீங்கள் நன்றாக பேட்டிங் செய்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது பந்து வீசி போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் எதையும் சரியாக செய்யாத அவரை போன்ற வீரரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்று தெரிவித்துள்ளார்.