பதவி விலக மறுக்கும் கோட்டபயா..பெரும்பான்மை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் என அறிவிப்பு
இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அந்நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு அதிகளவில் இருப்பதால், அங்கு தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. மேலும், இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிப்பதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நேற்று இலங்கை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து 4 புதிய அமைச்சர்களை அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமித்தார்.
அதிபர் கோட்டபயா, பிரதமர் மகிந்தா என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதிபர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என கோட்டபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று நடத்த கூட்டத்தில் பேசியபோது, அதிபர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் எந்த கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கிறதோ அந்த கட்சியிடம் ஆட்சியை கொடுக்க தயாராக உள்ளேன் எனவும் அதிபர் கோட்டபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.