‘பிரியங்கா காந்தியிடம் இருந்து 2 கோடி ரூபாய்க்கு ஓவியத்தை வாங்க என்னை வற்புறுத்தினர்’ - பகீர் கிளப்பிய யெஸ் வங்கி இணை நிறுவனர்
பிரியங்கா காந்தியிடம் இருந்து எம்.எப். உசேனின் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டதாக யெஸ் வங்கியின் இணை நிறுவனரான ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
யெஸ் வங்கியின் நிறுவனர்களில் ஒருவரான ராணா கபூர், வங்கியில் நடந்த முறைகேடு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
மேலும், ராணா கபூரும், டி.எச்.எஃப்.எல் நிறுவனர்களான கபில் மற்றும் தீரஜ் ஆகியோர் சேர்ந்து ரூ.5,050 கோடி அளவு முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கபில் மற்றும் தீரஜ் ஆகியோரும் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா பிரியங்கா காந்தியிடம் இருக்கும் ஓவியத்தை வாங்கிக்கொள்ளும்படி தன்னிடம் கூறியதாகவும், அவ்வாறு செய்தால் பத்ம பூஷன் விருது கிடைக்கும் என தெரிவித்ததாகவும்,
வாங்க மறுத்தால் காந்தி குடும்பத்துடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் போகும் என்றும், பத்ம பூஷண் விருது கிடைக்காமல் போகும் என்றும், அதோடு எஸ் வங்கிக்கும் பின் விளைவுகள் ஏற்படும் என தெரிவித்ததாக ராணா கபூர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.