கேப்டன் பதவியே எனக்கு வேண்டாம் - தெறித்து ஓடும் பிரபல இந்திய வீரர்
தான் பந்துவீச்சில் முழுக்கவனம் செலுத்த உள்ளதாகவும், கேப்டன் பதவியெல்லாம் தனக்கு வேண்டாம் எனவும் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விராட் கோலி விலகினார். இதனையடுத்து அடுத்த டெஸ்ட் அணி கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பலரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் தனக்கு கேப்டன் பதவி கொடுத்தால் பெருமையாக நினைப்பேன் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியதாக தகவல் வெளியானது.
இதனிடையே தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் போட்டிக்கான அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகித்து வரும் ஜஸ்பிரித் பும்ராவிடம், டெஸ்ட் போட்டியின் கேப்டன் பொறுப்பை கொடுத்தால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நான் அப்படி ஒரு எண்ணத்திலேயே இல்லை. எனது கவனம் எல்லாம், அன்றைய நாளில் பந்துவீச்சை எப்படி செய்ய வேண்டும்?, எப்படி ரன்களை கட்டுப்படுத்த வேண்டும்? என்பது மட்டும்தான். எனது செயல்பாட்டை மட்டுமே நான் துரத்தி செல்கின்றேன். கேப்டன் பொறுப்பை அல்ல. கேப்டன் பொறுப்பு எனக்கு கொடுக்கப்படும் நிலை வந்தால், அதைப் பற்றி நீண்ட ஆலோசனை செய்த பிறகே ஏற்பதா? இல்லையா? என முடிவு செய்வேன்.
இப்போது எதுவும் கூற இயலாது. நான் இன்னும் அந்த இடத்தில் போதுமான அனுபவத்தை பெறவில்லை. அணியின் பங்களிப்பிற்காக மட்டுமே என்ன செய்ய வேண்டும் என ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் நினைத்து பயிற்சி செய்கிறேன்.கேப்டன் பொறுப்பு கிடைத்தால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அதற்காக எந்த அளவிற்கு அர்ப்பணிப்பு கொடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆகையால் இப்போது எந்த எண்ணமும் இல்லை என திட்டவட்டமாக பும்ரா தெரிவித்துள்ளார்.