மற்றவர்களை சிரிக்க வைக்கும் இந்த வேலை எனக்கு பிடித்திருக்கிறது : நடிகர் வடிவேலு உருக்கம்
நடிகர் வடிவேலு தன்னுடைய (12.9.2021) பிறந்தநாளை நாய் சேகர் படக்குழுவினருடன் கொண்டாடினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேல் : இந்த பிறந்தநாள் இன்று புதிதாக பிறந்தது போல் உள்ளது.
அதேபோல் பிரச்சனைகள் அனைத்தையும் கடந்து தற்போது நாய் சேகர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் திரையுலகில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.
சாதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இன்னும் பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டி உள்ளதுஎன்று தெரிவித்தார். மேலும், காட்டாற்று வெள்ளத்தில் போய்க்கொண்டு இருந்த தன்னை கலைத்தாய் அள்ளி எடுத்துக் கொண்டால். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை. மற்றவர்களை சிரிக்க வைக்கும் இந்த வேலை எனக்கு பிடித்திருக்கிறது.
குழந்தைகள் வரை என்னை தெரிந்து வைத்து, என்னை போன்றே பாவனைகள் செய்வது கடவுள் கொடுத்த வரம். திரைத்துறையில் எனக்கு போட்டி நான் தான். ஒவ்வொரு படம் நடிக்கும் பொழுதும் முந்தைய கதாபாத்திரத்தை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைப்பேன். எந்த சமூக வலைதளத்திலும் நான் இல்லை என் பெயரில் வெளியாகும் அனைத்து சமூக வலைதள பகுதிகளும் போலியானவை.
சுராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவரிடம் முதன் முதலில் பேசிய போது என்னுடைய தீவிர ரசிகர் என உற்சாகத்துடன் பேசினார். அவருடன் வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சிஎன வடிவேல் தெரிவித்தார்.