இதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது : டென்ஷனான சசிகலா
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக அலுவலகம் வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இதனிடையே சென்னை ஓட்டேரியை சேர்ந்த அதிமுக தொண்டர் ஓம்பொடி பிரசாத் சிங் என்பவர் நேற்று முன்தினம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு பெற வந்தார். எனினும், அவருக்கு வேட்புமனு வழங்கப்படவில்லை. மேலும் சிலர் அவரை அடித்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் நேற்று இந்த பதவிகளுக்குப் போட்டியிட 5க்கும் மேற்பட்டோர் முன் வந்தனர். எனினும் அவர்கள் வேட்புமனு பெற முடியாத நிலை ஏற்பட்டது. அங்கிருந்த நிர்வாகிகள் சிலர் வேட்புமனு பெற வந்தவர்களை தாக்கி வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறேன். இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது என சசிகலா டென்ஷனாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கழகத்தினர் ஒற்றுமையுடன் இருந்தால்தான், எதிரிகளை வெல்லமுடியும் என்ற தலைப்பில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்தது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமை படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.
என்றைக்கு நம் புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்று முதல் இன்று வரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களை பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது. எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதித்து அவர்களுடைய நலனில் அக்கறை காட்டும் போது தான், அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் அந்த இயக்கத்தின் மீது ஒரு நல்ல எண்ணமும், நம்பிக்கையும் வரும்.
எந்த ஒரு இயக்கத்திற்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள் தான் தேவையே ஓழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல. ஓமபொடி பிரசாத் சிங் புரட்சித்தலைவரின் அன்பைப் பெற்றவர். அதுமட்டுமல்ல பிரசாத் சிங் தலைவர் கையால் தாலி எடுத்து கொடுத்தால்தான் தனக்கு திருமணம் என்று திருமண மேடையில் வெகுநேரம் காத்திருந்து, பின்னர் தலைவரும் இந்த எளிய தொண்டனின் அன்பால் கட்டுப்பட்டு திருமண மேடைக்கு வந்து தாலி எடுத்து கொடுத்த பின்னர் திருமணம் செய்து கொண்டவர்.
அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் என் மீது விழுந்த அடியாக பார்க்கிறேன். இனியும் இதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் தான், எதிரிகளை வெல்ல முடியும்:
— s.h.nathan (@shnathanammk) December 4, 2021
சின்னம்மா அறிக்கை #Sasikala #ADMK pic.twitter.com/r1gpPbXYut
மேலும், புரட்சித்தலைவர் அவர்கள் கட்சி தொடங்கிய சிறிது காலத்தில் மீண்டும் திமுகவோடு இணைவதற்காக பேச்சுவார்த்தையில் இருந்த வேளையில் பிரசாத் சிங், முசிறிப்புத்தன் ஆகியோரை திமுகவினர் தாக்கயதை பார்த்தவுடன், திமுகவுடன் மீண்டும் சேர்வது என்ற முடிவை கைவிட்டு விட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து வழி நடத்தி வெற்றிகண்டார். அதே போன்று, எளிய தொண்டரான ராஜேஷூம் இன்றைக்கு தலைமைக் கழகத்துலேயே தாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது.
இன்று, நம் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடுதான் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் கட்டி காத்த இந்த இயக்கத்தை சிரழித்துவிடாதீர்கள். இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது. தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறேன்.
ஒரு தலைமையால்தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால் தான் வரும் நாட்களில், நம் எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை உணர்ந்தாக வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.