கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் - கணவனுக்கு 6 வருடமாக உணவில் போதை மருந்து கலந்து கொடுத்த மனைவி கைது
கேரளாவில் 6 வருடங்களாக கணவன் சாப்பிடும் உணவில் போதை மருந்து கலந்து கொடுத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவின் கோட்டயம், பாலா நகரைச் சேர்ந்தவர் சதீஷ். இவருடைய மனைவி ஆஷா. இவர்களுக்கு 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சதீஷ் ஐஸ்கிரீம் தொழில் செய்து வருகிறார்.
இதனையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு பாலக்காட்டில் சொந்த வீட்டையும் சதீஷ் வாங்கி இருக்கிறார். ஆனால், ஆஷா அடிக்கடி கணவனிடம் சின்ன விஷயத்துக்கெல்லாம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சதீஷ் தினமும் இரவு உணவு சாப்பிட்டவுடன் தூக்கம் வந்துள்ளது. மேலும், அவருக்கு உடல்சோர்வும் ஏற்பட்டிருக்கிறது. சுமார் 6 வருடங்களுக்கு மேலாக அவருக்கு இப்பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. இதனால், மருத்துவரிடம் சென்றபோது சர்க்கரை அளவு குறைவதே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளனர். இதற்கிடையில், செப்டம்பர் 2021ம் ஆண்டு முதல் சதீஷ் வீட்டில் சாப்பிடுவதை நிறுத்தி இருக்கிறார். இதனால், அவர் உடலில் எந்தப் பிரச்னையும் வரவில்லை.
சாப்பிட்ட உடனே தூக்கம், உடல் சோர்வு எதுவும் ஏற்படவில்லை. இதனால், தன் மனைவி உணவில் எதையாவது சேர்க்கிறாளோ என்று சதீஷ்ஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனைவியின் நெருங்கிய தோழியை சந்தித்து இந்த பிரச்சினையை கூறியிருக்கிறார்.
அப்போது மனைவியின் தோழி கூறுகையில், ஆஷா உங்கள் உணவில் ஒரு மருந்துப்பொருள் கலந்து கொடுத்து வருகிறாள். என் கணவருக்கு இந்த மாத்திரை கொடுக்க பரிந்துரை செய்திருக்கிறாள். அப்போதுதான் கணவன் நாம் சொல்லும்படி நடந்து கொள்வார்கள் என்று ஆஷா சொன்னதாக தோழி சதீஷிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, சதீஷ் மனைவி ஆஷா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷாவை கைது செய்துள்ளனர்.
கணவர் பெயரில் இருக்கும் சொத்துக்களையும் தன் பெயரில் மாற்றிக்கொள்ள திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கணவனுக்கு சாப்பிடும் உணவில் மருந்து கலந்து கொடுத்த மனைவி செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.