மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை
குடித்து விட்டு வரும் கணவனை மனைவி கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு (38). இவர் ரயில்வேயில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான தினேஷ் பாபு, தினமும் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று குடித்து விட்டு வந்த தினேஷை, நந்தினி கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்குள்ளும் மீண்டும் சண்டை வந்துள்ளது. இதனால், மனவேதனையில் இருந்த தினேஷ் குடிபோதையில் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று அங்குள்ள மின்விசிறி கொக்கியில் புடவையால் தனக்குத் தானே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

வெகுநேரம் வெளியே தினேஷ் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தினேஷ் பாபு தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ் பாபு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.