அடிலெய்டு மைதானத்தில் விழுந்த இடி - உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர்கள்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் போது மைதானத்தில் இடி விழுந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது போட்டி பகல் இரவு ஆட்டமாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் வார்னர் 95, மார்னஸ் லாபஸ்சேங் 103, ஸ்டீவ் ஸ்மித் 93, அலெக்ஸ் கேரி 51 ரன்கள் விளாச முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 473 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து தரப்பில் இங்கிலாந்து பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள இங்கிலாந்து 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது டேவிட் மாலன் பந்தை எதிர்கொள்ள காத்திருந்த போது பயங்கர சத்தத்துடன் மைதானம் அருகே இடி விழுந்தது. இதனால் அவர் பந்தை எதிர்கொள்ளாமல் விலகினார். அதிர்ஷ்டவசமாக இதில் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் எவ்வித காயமும், ஆபத்தும் ஏற்பட வில்லை. இது வீரர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இடி விழுந்த காட்சி ஸ்டம்பில் பொறுத்தப்பட்டு இருந்த கேமிராவில் பதிவானது. இந்த புகைப்படத்தை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் வெளியிட்டுள்ளார்.