கொடைக்கானல் மக்களை கவர்ந்த அந்துப்பூச்சிக்களின் பிரம்மாண்ட கூடு...!
கொடைக்கானலில் மரம் முழுவதும் பின்னப்பட்டுள்ள அந்துப்பூச்சிக்களின் பிரம்மாண்ட கூடாரத்தை சாலையில் பயணிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான குப்பம்மாள் பட்டி அருகே ஒட்டன்சத்திரம் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் இருந்த சோலை மரங்களில் லட்சக்கணக்கான அந்துப்பூச்சிகள் பிரம்மாண்டமாக கூடு ஒன்றை கட்டியுள்ளது. இந்த அந்துப்பூச்சியின் பிரம்மாண்டமான கூடாரத்தை இந்த பகுதி மக்கள் ராட்சத சிலந்தி வலை என்றும் அரிபூச்சி என்றும் மாறுபட்ட பெயர்களை கொண்டு அழைத்து வருகின்றனர்.
இதுகுறித்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உயிரி தொழில் நுட்பத்துறை பேராசிரியர் உஷா ராஜா நந்தினி தெரிவிக்கும் போது, இந்த பூச்சியின் அறிவியல் பெயர் பால் வெப் வாம் மோத் (FAUL WEB WARM MOTH ) எனவும் தமிழில் அந்துபூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கு அமெரிக்காவை பூர்விகமாக கொண்டதாகவும், தற்போது ஈரோப், ஆசிய கண்டங்களில் பரவி வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது கொடைக்கானல் மலை பகுதிகளில் தற்போது தென்பட்டுள்ள இந்த வகையான அந்து பூச்சிகள் உயரமான மரத்தில் பரவினால் மரத்தில் உள்ள இலைகளின் அடியில் சுமார் 500 முட்டைகள் இட்டு மரத்தில் இருந்த இலைகளை அரித்து மரம் முழுவதும் சிலந்தி வலை போல் பிரமாண்டமாக கூடாரம் அமைத்து இதில் இனப்பெருக்கம் செய்வதாகவும், நாளடைவில் கூட்டு புழுவாக மாறி அந்துப்பூச்சியாக வெளி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த பூச்சிகளின் கூடாரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே தென்படும். ஆனால் தற்போது சாலையின் ஓரங்களில் அந்துப்பூச்சி கூடாரங்கள் தென்படுவதால் அருகில் உள்ள பழ மரங்கள் மற்றும் அலங்கார பூக்கள் கொண்ட மரங்கள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மரங்களில் பரவினால் மரம் முழுவதும் இலை இல்லாமல் பட்டுபோகும் சூழ்நிலை ஏற்படும் எனவும் உஷா ராஜா நந்தினி கவலை தெரிவித்துள்ளார்.
இதனை தீ வைத்து அழிக்காமல் அந்துப்பூச்சி கூடாரங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த அந்து பூச்சி மனிதர்கள் மீது பட்டால் சாதாரண அலர்ஜி மட்டுமே ஏற்படும் எனவும், வேறு எந்த பெரும் ஆபத்துகள் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அந்துப்பூச்சி பிரம்மாண்டமான கூடாரத்தை சாலையில் பயணிக்கும் பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.