தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும்..யாரும் வெளியே வர வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும், அதனால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளதாவது - இன்று முதல் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதி நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

இதனால், ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.