காது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண் - ஒரு கையை இழந்த கொடுமை... - அதிர்ச்சி சம்பவம்
பாட்னாவில் செவிலியர் ஒருவரின் அலட்சியத்தில் இளம்பெண்ணின் ஒரு கை துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்
பாட்னாவில் மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தான் மருத்துவமனை உள்ளது. கடந்த 11ம் தேதி அன்று காது அறுவை சிகிச்சைக்காக ரேகா என்ற பெண் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, மருத்துவமனையில் செவிலியர் ரேகாவிற்கு நரம்புக்கு பதிலாக தமனியில் ஊசி போட்டுள்ளார்.
இதனையடுத்து, ரேகாவின் கை கொஞ்சம், கொஞ்சமாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்தது. பின்னர், கையில் வலி கொஞ்சம், கொஞ்சமாக அதிகமானது.
வலி தாங்க முடியாமல் ரேகா மறுபடியும் அந்த மருத்துவமனைக்கு சென்று வலி குறித்து மருத்துவமனையில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவரை கண்டுக்கவே இல்லை.
ஒரு கையை இழந்த கொடுமை
அவரை வெளியே செல்லும்படி கூறியுள்ளனர். தவறான சிகிச்சையின் காரணமாக ரேகா ஒரு கையை இழந்துள்ளார். கையை இழந்தது மட்டுமின்றி, நவம்பரில் அவருக்கு நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இது குறித்து ரேகாவின் பெற்றோர்கள் கன்கர்பாக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் நியாயம் கேட்டு கோர்ட்டிற்கு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அவரது வழக்கறிஞர் ரூபம் கூறுகையில், "இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள். மருத்துவ அலட்சியத்தால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரது கையும் துண்டாகியுள்ளது. இதற்காக, நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நோயாளிக்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும். இவ்வழக்கில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.