அவர் கேப்டனே இல்லையா ? இனிமேதான் பிரச்சினையே - இந்திய அணியை எச்சரித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது இந்திய அணியில் பிளவை ஏற்படுத்திவிட கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த விராட் கோலி, நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக திடீரென அறிவித்திருந்தார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகுவதாக அறிவித்திருந்த விராட் கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகும் திட்டம் இல்லை என்றும் அறிவித்திருந்தார்.
இதனால் டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார் சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணியை மிக சிறப்பாக ரோஹித் சர்மா வழிநடத்தியதால், விராட் கோலியை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு விராட் கோலி இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து வரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் , இந்திய அணியில் பிளவு ஏற்படாமல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்னை பொறுத்தவரையில் சரியான முடிவு தான். இனி விராட் கோலி எவ்வித அழுத்தமும் இல்லாமல் விளையாடலாம்.
ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் வழிநடத்துவம், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்துவதும் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இது இந்திய அணியில் இரண்டு பிரிவுகளை உருவாக்கிவிட கூடாது.
விராட் கோலிக்கு ஆதரவாக சிலரும், ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக சிலரும் செயல்பட்டால் அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்துவிடும். எனவே அது போன்ற பிரச்சனைகள் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.