ஹிஜாப் சர்ச்சை ; உடுப்பி எம்ஜிஎம் கல்லூரிக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிப்பு
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க, போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில், உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் (எம்ஜிஎம்) ஒரு பிரிவு மாணவர்கள் ஹிஜாப் அணிந்தும், மற்றொரு பிரிவு மாணவர்கள் காவி நிற துண்டு மற்றும் ஷால் அணிந்தும்,
கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஜெய் ஸ்ரீராம் என முழக்கங்களை எழுப்பியதால் போராட்டம் வெடித்துள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
வகுப்பறைகளில் மாணவர்களுக்கு இடையே போராட்டம் நடந்து வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் எம்ஜிஎம் கல்லூரியின் முதல்வர்.
முன்னதாக, ஹிஜாப் சர்ச்சை போராட்டத்தை அதிகரித்துள்ள நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மாணவர்கள் அமைதியை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
"இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அமைதி காத்து குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். இந்த விவகாரம் இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், அதுவரை காத்திருப்போம்" என கூறினார்.