மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கைது

Tiruppur governmentschoolissue
By Petchi Avudaiappan Jan 19, 2022 04:32 PM GMT
Report

திருப்பூரில் பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்து ஜாதி பெயரை சொல்லி திட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை கீதா கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய கீதா பள்ளியில் பயிலும் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து  பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், புகார் உண்மையென தெரியவந்ததால், தலைமை ஆசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மேலும், இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் தலைமை ஆசிரியை கீதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று தலைமை ஆசிரியை கீதா கைது செய்யப்பட்டார்.