இமாச்சல மக்களின் குரல் - ஆட்சியை நிர்ணயிக்கும் ஆப்பிள்!
இமாச்சலம் இந்திய அரசியலமைப்பு சட்டம் செயல்பாடுக்கு வந்தபின் 1951ல் சி தகுதி மாநிலமாக உருவானது. 1956ல் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக விளங்கி வந்த பகுதி 1971ல் 18வது மாநிலமாக ஆனது.
இமாச்சல பிரதேசம்
சில நேபாளிகள் நேபாளத்தில் இருந்து பிரித்தானி கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டு விடுதலைக்குப்பின் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்ட பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து அகண்ட நேபாளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர். இக்கருத்துக்கு இப்பகுதியில் ஓரளவு ஆதரவும் உள்ளது.
யஷ்வந்த் சிங் பர்மார்
யஷ்வந்த் சிங் பர்மார் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராகவும் (1952-1956) இருந்தார். 1956 இல் இமாச்சல பிரதேசம் யூனியன் பிரதேசமாக மாறியதால் பர்மார் பதவி விலக நேர்ந்தது மற்றும் லெப்டினன்ட் கவர்னராக நியமிக்கப்பட்ட நிர்வாகியின் கீழ் வைக்கப்பட்டார்.
மீண்டும் முதல்வராகி (1963-1977) வரை பதவியில் இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக தனது சொந்த கட்சியினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றார்.
வீரபத்ர சிங்
அதன்பின், அதிக ஆண்டுகள் மற்றும் 3 முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்தவர் வீரபத்ர சிங். புசாகிர் மன்னரான சேர் பதம் சிங்கிற்கு வாரிசாகப் பிறந்து 1947ஆம் ஆண்டு, தமது 13வது வயதில், சமத்தானத்தின் மன்னராக பதவி ஏற்றார் தொடர்ந்து காங்கிரசை சேர்ந்த இவர் 1983 முதல் 1990 வரையும், 1993 முதல் 1998 வரையும் 2003 முதல் 2007 வரையும் முன்னதாகப் பொறுப்பாற்றி உள்ளார். நடுவண் அரசிலும் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
1962, 1967, 1972, 1980 மற்றும் 2009களில் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
பிரேம் குமார் துமால்
இவரைத் தொடர்ந்து, பிரேம் குமார் துமால் 2007ஆம் ஆண்டு மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி காணும் முன்னர் மாநில சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார். அந்த ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக 1998 முதல் 2003 வரை இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார்.
ஜெய்ராம் தாகூர்
இவருக்குப்பின், ஜெய்ராம் தாகூர் இமாச்சலப்பிரதேசத்தின் 14 ஆவது முதலமைச்சரானார். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரேம் குமார் துமால் நவம்பர் 2017 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சுஜான்பூர் தொகுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இமாச்சலப்பிரதேசத்தின் சட்டமன்றத் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டசபைக்கு மண்டியில் சிராஜ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுக்விந்தர் சிங் சுகு
தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றி பெற்றதை அடுத்து, 2022ல் சுக்விந்தர் சிங் சுகு முதலமைச்சராக பதவியேற்றார். நாதவுன் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
4 ஆண்டுகளாக நடந்த அத்தனை தேர்தல்களிலும் காங்கிரஸ் வரிசையாக தோல்வியையே தழுவியிருந்தது. இந்தச் சூழலில் காங்கிரஸின் இந்த வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆட்சி மாற்றத்தை நிறுத்தி, ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது. இமாசலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபைத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஆப்பிள் விவசாயமே முக்கியத் தொழிலாகும். மற்ற தொகுதிகளிலும் ஆப்பிள் சாகுபடியும் அதைச் சார்ந்த தொழில்களும் வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆட்சியை மாற்றும் ஆப்பிள்
பல தொகுதிகளில் ஆப்பிள் விற்பனையாளர்கள் அதிகம். இவர்களே இமாசலப் பிரதேச தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அதானி குழுமத்தின் ‛அதானி அக்ரி பிரெஷ்' நிறுவனம்தான் இமாசலப் பிரதேசத்தில் ஆப்பிள் விவசாயிகளிடம் அதிக அளவு ஆப்பிளை கொள்முதல் செய்து வந்தது.
இந்நிறுவனம் வழங்கிய வாக்குறுதிகள் படி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு ஆப்பிளை கொள்முதல் செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய காரணங்களால் ஆப்பிள் விவசாயிகள் வீதிகளில் இறங்கி கடுமையாகப் போராடினர். இதுவே காங்கிரஸ் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது.
இந்நிலையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் மக்களுக்கு அளித்துள்ளது. இதனை செயல்படுத்துமா என பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையில் 5 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்திருந்த பாஜக மீண்டும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமா என்பது தான் இங்கு சவால்.!