ஹிஜாப் அணிய தடை விதிப்பு - கல்லூரிக்கு வர மாட்டோம் - பல முஸ்லிம் மாணவிகள் முடிவு?
ஹிஜாப் அணிவதற்கு தடை தொடரும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
கர்நாடகாவில் பியு கல்லுாரியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு சில இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பள்ளி மற்றும் கல்லுாரி நிர்வாகம் தடை விதித்தது.
எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இந்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, கிருஷ்ணா தீட்சித்,ஜெ.எம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் விசாரணை முடியும் வரை மத அடையாளங்களோடு வகுப்பிற்கு வர கூடாது என உத்தரவிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல.
எனவே, கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்றும் தடைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், வகுப்பறையில் ஹிஜாப் அணிய கூடாது என்று நீதிமன்ற உத்தரவால் பல மாணவிகள் படிப்பை கைவிட முடிவு செய்துள்ளனர். 5 அல்லது 6 இறுதியாண்டு மாணவிகள் டிரான்ஸ்பர் சர்டிபிகேட் கேட்டுள்ளனர். பல மாணவிகள் வீட்டிலேயே தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.