லயோலா கல்லூரிக்குள் ஹிஜாபுக்கு தடை விதித்த நிர்வாகம் - மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
கர்நாடகா, புதுச்சேரியைத் தொடர்ந்து தற்போது விஜயவாடாவில் ஹிஜாப் பிரச்சினை வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் லயோலா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் அனைத்து மாணவர்களும் ஒரே சீறுடைதான் அணிந்து வர வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது.
இதனையடுத்து, லயோலா கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப்புடன் நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது. இதனால், ஹிஜாப் அணிந்து வந்த இரு மாணவிகள் கல்லூரிக்கு எதிரில் நின்று போராட்டம் நடத்தினார்கள்.
இது தொடர்பாக, மாணவிகள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கல்லூரிக்கு வந்த பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வளவு நாளாக எங்கள் குழந்தைகள் ஹிஜாப் அணிந்துதான் கல்லூரிக்கு வந்தனர்.
இப்போ.. திடீரென்று ஹிஜாப் அணிய கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள் என்று பெற்றோர்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கல்லூரிக்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், நிர்வாகமோ... அனைத்து மாணவர்களை போல கல்லூரிக்குள் வந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கறாராக கூறிவிட்டது. மாணவிகளை ஹிஜாப்புடன் கல்லூரிக்குள் அனுமதிக்க போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனையடுத்து, அந்த இரு மாணவிகளும் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச்சென்றனர்.
இது போன்ற போராட்டம் மாநிலம் முழுவதும் பரவாமல் இருக்க, ஆந்திர மாநில கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.