ரத்து செய்ய முடியாது...ஹெச் ராஜா மீதான வழக்கு...அதிரடியாக உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
பாஜகவின் மூத்த தலைவர் ஹெச் ராஜா மீதான 11 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
அவதூறு வழக்குகள்
பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா திமுக அரசு குறித்தும், அரசு அதிகாரிகள் சிலர் குறித்தும் அவ்வப்போது கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகினறார். இதில் குறிப்பாக, கடந்த 2018-ஆம் ஆண்டு அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியிருந்தார்.
அதே போல, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்தும் ஹெச். ராஜா முன்னர் கடுமையான விமர்சனத்தை செய்திருந்தார். பெரியார் சிலை குறித்தும் ஹெச். ராஜா கடுமையான வாக்கியங்களை பயன்படுத்தி விமர்சனம் செய்தார்.
தள்ளுபடி கோரிய ஹெச்.ராஜா
இந்நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் மீது இது போன்று 11 அவதூறு வழக்குகள் பதியப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என ஹெச் ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவி வழி செய்திதான் என்றும், ஆதாரம் ஏதும் இல்லை என்றும், பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதில் மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஹெச்.ராஜா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மனுக்கள் தள்ளுபடி
இதற்கு காவல் துறை சார்பில், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்றும் சுட்டிக்காட்டிய காவல் துறை, வழக்குகளை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஹெச்.ராஜா தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து, மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.