ராஜினாமா செய்யாததால் 53 ஐகோர்ட் அரசு வழக்கறிஞர்கள் பணி நீக்கம்!
தமிழகத்தில் ஆட்சி மாறியதும் உயர்நீதிமன்றம் அரசு வழக்கறிஞர்களில் 138 பேர் ராஜினாமா செய்துவிட்டனர். ராஜினாமா செய்யாமல் இருந்த 53 பேரும் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டவர்களில், நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாறியதும் சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களில் 108 பேர் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞர்களில் 30 பேர் ராஜினாமா செய்தனர்.
அதிமுக வழக்கறிஞர்களின் இந்த ராஜினாமாவை ஏற்று அரசாணைபிறக்கப்பட்டது. 138 பேரின் ராஜினாமாவை ஏற்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், புதிய ஆட்சியின் கீழ் தலைமை அரசு வழக்கறிஞராக சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற, உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கும் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ராஜினாமா செய்யாத அதிமுக வழக்கறிஞர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது தமிழக அரசு.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் 28 பேர், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் 25 பேர் என மொத்தம் 53 பேரையும் அதிரடியாக பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.