நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு
விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கை ரத்து செய்ய சீமான் தொடர்ந்த வழக்கு தீர்ப்பின் முழு விவகாரம் வெளியாகியுள்ளது.
விஜயலட்சுமி வழக்கு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2012 ஆம் ஆண்டு இந்த புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
மனு தள்ளுபடி
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்ய வேண்டுமென சீமான் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. சீமான் அளித்த மனு மீதான வழக்கு 17.02.2025 அன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
சீமான் தரப்பு வாதத்தையும், விஜயலட்சுமி தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, "விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்ப பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் இந்த வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது" என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை 12 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பின் முழு விவரங்கள்
இந்நிலையில் இந்த தீர்ப்பின் முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், "சீமான் மீதான இந்த வழக்கை ஆராய்ந்த பொழுது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்ப பிரச்னை, திரைத்துறை பிரச்னையால் சீமானை விஜய லட்சுமியின் குடும்பத்தினர் அணுகியுள்ளனர்.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளது தெரிய வருகிறது. மேலும் சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்வதாக சீமான் வாக்குறுதி அளித்துள்ளார் எனவே அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க 7 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜயலட்சுமியிடம் சீமான் பெருந்தொகையை பெற்றிருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறிய புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகின்றன" என கூறப்பட்டுள்ளது.