எழுவர் விடுதலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மீண்டும் 9-ம் தேதி விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைதுகடந்த 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதன் மீது எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார். இதனால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு கடந்த ஜனவரி 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்தது.
இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர். உச்சநீதிமன்ற அளித்த ஒரு வார கால அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை உடன் முடிவடைந்தது. தற்போது வரை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் உள்ளார்.
இதனால் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை வரும் 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.