மற்றொருவருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்குவதில் என்ன சிக்கல்? - மதுரைக்கிளை கேள்வி
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிசந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிசந்திரன் உள்ளார்.
இந்த வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது. கொரோனா தொற்று சிறைவாசிகளுக்கும் பரவிய நிலையில், எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்க கோரி மனு அனுப்பினேன்.
அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது என தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இதனை காரணம் காட்டி ஏற்கனவே தமிழக அரசு விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு ரவிச்சந்திரனுக்கும் இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசுத்தரப்பில், இது குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், வழக்கில் மற்றொருவருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், இவருக்கு வழங்குவதில் என்ன சிக்கல்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அரசுத்தரப்பில் உரிய தகவல் பெற்று தெரிவிக்க
உத்தரவிட்டு வழக்கை 1 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.