அயோத்யா மண்டபம் வழக்கு , அறநிலைத்துறை உத்தரவினை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்..!
சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவினை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் மூலம் கடந்த 1954-ம் ஆண்டு அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபமானது பொதுமக்களின் நன்கொடை மற்றும் காணிக்கைகள் மூலம் இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு நிர்வாகத்தில் நிதி முறைகேடு நடைபெறுவதாகப் புகார் எழுந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு இந்த மண்டபத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அன்றைய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அரசின் அந்த உத்தரவை எதிர்த்துக் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. நீண்ட வருடங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணை, கடந்த மார்ச் மாதம் தனி நீதிபதி வேலுமணி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தலாம் என்று கூறி, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ராம் சமாஜ் அமைப்பினர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவு ரத்து செய்துள்ளது உயர்நீதி மன்றம்.