இன்று முதல் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம் விதிக்க முடிவு
சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
என்ன தான் மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடையே எவ்வளவு விழிப்புணர்வு அளித்தாலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதேசமயம் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சென்னையில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் கடந்த ஓராண்டில் மட்டும் இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர். இதேபோல ஹெல்மெட் அணியாததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்களும், பின்னால்அமர்ந்திருந்த 134 பயணிகளும் உயிரிழந்தனர். அதேபோல 2929 வாகன ஓட்டிகளும், பின்னால்அமர்ந்திருந்த 365 பயணிகளும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பின்னர் அமர்ந்து செல்பவர்கள் என இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.