எப்படி நடந்தது விபத்து? வருண் நிலை என்ன? நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த ராஜ்நாத் சிங்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து வருகிறார்.
கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
கேப்டன் வருண் சிங் 80 தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
முதலில் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் பெயர்கள் தனித்தனியாக வாசிக்கப்பட்டு அவர்களுக்கு இரு அவைகளில் எம்.பி,க்களின் முன்னிலையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங, விசாரணையானது ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையில் நடைபெறும்.
விசாரணை குழு நேற்றே வெல்லிங்டன் சென்று விசாரணையை தொடங்கிவிட்டது என்றார்.
தொடர்ந்து, உடல்கள் இன்று மாலை டெல்லிக்கு எடுத்தவரப்பட உள்ளன. இறந்தவர்களின் உடல்களுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும், விபத்து குறித்து விமான படை தளபதி தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.