6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Heavy Chennai Rain Tamilnadu
By Thahir Nov 20, 2021 03:28 AM GMT
Report

தாழ்வு மண்டலம் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே நேற்று அதிகாலை கரையை கடந்த நிலையில்,

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து,

நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி முதல் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது.

தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கடந்தது என்றும்,

முழு பகுதியும் அதிகாலை 5.30 மணிக்குள் கரையை கடந்துவிட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

கரையை கடந்ததும் தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலு குறைந்து, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் கனமழை அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும்,

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அனேக இடங்களில்... நாளை மறுதினமும் (திங்கட்கிழமை), 23-ந் தேதியும் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளன

ர். 5 இடங்களில் அதி கனமழை நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில்,

தமிழகத்தில் 5 இடங்களில் அதி கனமழையும், 37 இடங்களில் மிக கன மழையும், 66 இடங்களில் கன மழையும் பெய்து இருக்கிறது.

இதில் அதிகபட்சமாக திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர் தலா 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதேபோல், மணம்பூண்டி 21 செ.மீ., முகையூர் 20 செ.மீ., புதுச்சேரி, அனந்தபுரம், வேங்கூர் தலா 19 செ.மீ., விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சி, மரக்காணம் தலா 18 செ.மீ., வானூர் 16 செ.மீ., திருவண்ணாமலை 15 செ.மீ., உத்திரமேரூர், தண்டாரம்பட்டு, கடலூர், ஊத்தங்கரை, வேம்பாக்கம் தலா 14 செ.மீ. உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

அடுத்த வாரம் மழை அதிகம் இதன் தொடர்ச்சியாக அடுத்த வாரம் தமிழகத்தில் இயல்பை விட சற்று மழை அதிகம் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

அதற்கான காரணம் குறித்து ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகிறது என்றும், இதன் காரணமாக 26 மற்றும் 27-ந் தேதிகளில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது' என்றும் தெரிவித்தனர்.