டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்..!
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, அடுத்த 24 மணிநேரத்தில் மற்ற மாவட்டங்களிலும் இந்த பருவமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தற்போது தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுதவிர மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது 3 மேலடுக்கு சுழற்சி இருப்பதால் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் குமரிக்கடல், லட்சத்தீவுப் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் 40-50கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்மேற்கு பருவமழையால் அரபிக்கடல் பகுதியில் 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.