பகலில் வெளியே வராதீங்க... தமிழக மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

By Petchi Avudaiappan Apr 30, 2022 11:12 PM GMT
Report

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் ஏப்ரல்,மே மாதங்கள் கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்திலும் வெப்பநிலை வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் பகலில் வெளியில் செல்வதே குறைந்து விட்டது.  நேற்றைய தினம் தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

அந்த வகையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் தமிழகத்தில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ளதால் பொதுமக்கள் மழை வேண்டி ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.