முகப்பு விளக்கு பழுது.., செல்போன் டார்ச்சில் சென்ற அரசு பேருந்து
திருப்பத்தூர் பணிமனையை சேர்ந்த அரசு டவுன் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டது.
அந்த பேருந்தின் முகப்பு விளக்கு எரியாததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருட்டில் பேருந்தை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன் பேருந்து மெதுவாக இயக்கப்பட்டது.

பயணிகள் மற்றும் கண்டக்டர் செல்போன் டார்ச் லைட்டை ஒளிரவிட்ட நிலையில் பேருந்து ஒரு வழியாக திருப்பத்தூரை சென்றடைந்தது.
இந்நிலையில், டார்ச் லைட் வெளிச்சத்தில் பேருந்து இயக்கப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பையும், அப்பகுதியில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
மேலும், பழுதான பேருந்துகளை மாற்றி நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.