தோல்விக்கு இவர் தான் காரணம் கே.எல்.ராகுல் வேதனை..!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களில் இருந்த லக்னோ மற்றும் பெங்களூர் அணி இடையேயான எலிமினேட்டர் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் ராஜட் பட்டித்தர் 112 ரன்களும் தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் எடுத்தனர்.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் டி காக் 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
இதன்பின் வந்த மனன் வோஹ்ரா 19 ரன்னிலும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா 26 பந்துகளில் 45 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இந்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 19 வது ஓவரில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்த லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதனிடையே தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டதே தோல்விக்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கே.எல் ராகுல் பேசுகையில், “பீல்டிங்கில் நான் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கான முக்கிய காரணம். கேட்ச்களை தவறவிடுவது எந்தவிதத்திலும் கை கொடுக்காது.
பெங்களூர் அணியின் படித்தர் மிக சிறப்பாக விளையாடினார். முதல் மூன்று பேட்ஸ்மேன்களில் ஒருவர் சதம் அடித்தால் பெரும்பாலும் அந்த அணி தான் வெற்றி பெறும்.
பெங்களூர் வீரர்கள் பீல்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டனர், ஆனால் நாங்கள் மிக மோசமாக செயல்பட்டோம். இந்த தொடரில் எங்களால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாவிட்டாலும், மொஹ்சின் கான் போன்ற சிறந்த வீரர்கள் எங்களுக்கு கிடைத்துள்ளனர், அந்தவகையில் மகிழ்ச்சி தான்.
இது தான் எங்கள் அணிக்கு முதல் ஐபிஎல் தொடர், முதல் தொடரிலேயே ப்ளே ஆஃப் சுற்று வரை தகுதி பெற்றுள்ளோம்.
எங்கள் அணியில் அதிகமான இளம் வீரர்கள் உள்ளனர், நிச்சயமாக தவறுகளை அனைத்தையும் சரி செய்து கொண்டு அடுத்த தொடரில் முழு பலத்துடன் மீண்டு வருவோம்” என்று தெரிவித்தார்.