இந்திய அணியின் வெற்றிக்கு இவர் தான் முக்கிய காரணம் - வெகுவாக பாராட்டிய ரோகித் சர்மா
இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்த இந்திய வீரர்கள்
இப்போட்டி நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்துாரில் நேற்று நடந்து. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களம் இறங்கினர். இருவரும் நியூசிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை 4 பக்கமும் அடித்து விளாசி விளையாடினர்.
பின்னர் ரோகித் சர்மா 101 ரன்களும், ஷுப்மன் கில் 112 ரன்கள் எடுத்து சதத்தை பூர்த்தி செய்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்களை குவித்தது.
படுதோல்வியடைந்த நியூசிலாந்து
பின்னர் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான பின் ஆலன் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.
பின் களம் இறங்கிய ஹென்றி நிக்கோலஸ் 42 ரன்களும் டேரியல் மிட்செல் 24 ரன்களும் பிரேஸ்வெல் 26 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் முக்கிய பேட்டிங் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் நிலைத்து நின்று ஆடிய டீவன் கான்வே 100 பந்துகளில் 138 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் 41.2 ஓவரில் 295 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்தது.
இதையடுத்து இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு நாள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கு இவர் தான் காரணம் ரோகித் சர்மா புகழாரம்
பின்னர் இந்த வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா, இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ஷர்துல் தாகூரை வெகுவாக பாராட்டி பேசினார்.
மேலும் பேசிய அவர், கடந்த சில மாதங்களாகவே நாங்கள் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இந்த போட்டியில் நாங்கள் 380 ரன்கள் எடுத்திருந்தாலும், ஆடுகளத்தின் தன்மை பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் வெற்றிக்கு இந்த இலக்கு போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து கொடுத்தனர்.
அனைவரும் சொல்வதை போன்று ஷர்துல் தாகூர் ஒரு மேஜிசியனை போன்றவர் தான். தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் தொடர்ந்து சரியாக பயன்படுத்தி வருகிறார்.
அணிக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்து கொடுக்கிறார். ஷர்துல் தாகூர் மூலம் இந்திய அணியின் பந்துவீச்சிற்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.