பட்டியலினத்தவரின் நிலத்தை பாலிவுட் நடிகை வாங்கிய விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்டியலினத்தவரின் நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கிய விவகாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில விவகாரம்
நீதிபதிகள் உத்தரவு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, ஜெகதாலா என்ற கிராமத்தில் பட்டியலினத்தவரான எம்.குப்பன் என்பவருக்கு கடந்த 1978ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் நிலத்தை மாவட்ட ஆட்சியர் ஒதுக்கியுள்ளார்.
மேலும் அந்த நிலத்தை 10 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என நிபந்தனையும் விதித்திருந்தார். ஆனால் குப்பன் 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நிலத்தை ஒருவருக்கு விற்றுள்ளார். பின்னர் பலரிடம் கைமாறிய அந்த நிலத்தை கடந்த 1999ம் ஆண்டு பாலிவுட் நடிகை பூஜா பட் வாங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை பூஜா பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வாங்கியது செல்லாது. அந்த நிலத்தை அரசிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம்,நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது. அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து இதேபோன்று அந்தப் பகுதியில் நிலம் வாங்கிய பூஜா பட் உள்ளிட்ட பலர் வட்டாட்சியர் உத்தரவை எதிர்த்து 2017ம் ஆண்டில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் அனைத்து ரிட் மனுக்களையும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் உத்தரவு
மேலும், இதேபோன்று அரசுக்கு சொந்தமான சொத்துகளை மீண்டும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை பூஜா பட்டிடம் இருந்து நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் கோத்தகிரி தாலுகா தாசில்தாரால் தொடங்கப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
அதனை மறுத்த பூஜா பட்டின் வழக்கறிஞர் சொத்தை அவர் தொடர்ந்து அனுபவித்து வருவதாக வாதிட்டார். இந்த முரண்பட்ட வாதங்கள் காரணமாக, நிலத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாலிவுட் நடிகை பூஜா பட் தமிழில் 'கல்லூரி வாசல்' என்ற திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.