2016 தேர்தலில் இன்பதுரையின் வெற்றி செல்லாது - 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்பாவு வழக்கு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 46 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக, அப்பாவு அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். அப்பாவுவின் வாதத்தை ஏற்காமல் அங்கு இருந்த துணை ராணுவப்படையினர் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

இன்பதுரையின் தேர்தல் வெற்றியை எதிர்த்து அப்பாவு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனால் கடைசி சில சுற்று வாக்குகளை மறுபடியும் எண்ணுவதுடன், தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ணுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. நீதிமன்றம் வாக்குகளை எண்ணி முடித்தபோதிலும், அதன் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த முறையீட்டின் காரணமாகஅப்பாவு வழக்கில் தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது.

இதனிடையே 2021 சட்டமன்ற தேர்தலில், அதே ராதாபுரம் தொகுதியில் அப்பாவு 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பத்துரையை வீழ்த்தி வெற்றி பெற்றார். 2021 முதல் 2026 வரை சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு பணியாற்றினார்.
இன்பத்துரை 2025 ஆம் ஆண்டில் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு அப்பாவு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது எனவும், தபால் வாக்குகள் மறு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும், இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என பொருள் ஆகாது. ஆனால், இந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ. பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை இன்பதுரை உரிமையாக கேட்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, "கால தாமதம் எல்லாம் பெரிதாக தெரியவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தல் வழக்கின் தீர்ப்பு தாமதமாக வந்தாலும் நீதி வென்றுள்ளது. என் வலிக்கு நீதிமன்றம் நிவாரணம் அளித்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.