கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை தற்காலிகமே - நீதிமன்றம் சொல்வது என்ன?
கரூர் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசுபணியே வழங்க வேண்டும் என நீதிபதிகள் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அரசுப்பணி வழங்க எதிர்த்து வழக்கு
தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று தனியார் ஆலைக்கு அடிக்கல் நாட்டுவது மக்கள் சந்திப்பு என என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கரூர் சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இன்று நடைபெறும் நிகழ்வில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு முதல்வர் விஜய் அரசுப்பணிக்கான ஆணையை வழங்க உள்ளார்.
அரசுப்பணி வழங்க, நாம் தமிழர், திமுக, அமமுக, புதிய தமிழகம் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசுப்பணி வழங்க தடை விதிக்கக்கோரிய வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசு பணி வழங்குவதில் என்ன தவறு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும், நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப்பணி எதற்கு?
உச்சநீதிமன்றத்தில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது அரசுப் பணி வழங்குவது சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பாக அமையும்.
எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளிலும், இவ்வாறு நடந்தால் அரசுப்பணி கோர வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நடத்த கும்பகோணம் மகாமகம் நிகழ்வு, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களுக்கு யாருக்கும் அரசுப்பணி வழங்கப்படவில்லை.
கருணை அடிப்படையில் பணி வழங்கும் விதிமுறைகள் எதுவும் இதில் பின்பற்றப்படவில்லை. இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்களுக்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும்.
இவர்களுக்கு அரசுப் பணி வழங்கினால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர், டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு முயற்சிக்கும் போட்டித் தேர்வர்களுக்கு ஏமாற்றமாக அமையும்" என்ற வாதங்களை முன்வைத்தார்.
தற்காலிக பணி நியமனம்
வாதங்களை கேட்ட நீதிபதி, "முதல்வர் விஜய் தற்போது கரூர் பயணத்தில் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. பாதிக்கப்பட்டோருக்கு அரசுப் பணி வழங்கலாம். ஆனால் அந்த பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். ஆனால், அந்த பணியின் நிரந்தரதன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.
மேலும், டின்பிஎஸ்சியை எதிர் மனுதாரராக சேர்த்து வழக்கின் விசாரணையை ஜூலை 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |