கொரோனா நோயாளிகளின் இறப்பு சான்றிதழை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tn government Chennai high court Covid death certificate
By Petchi Avudaiappan Jun 11, 2021 11:22 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 கொரோனா காலத்தில் இணை நோய்களால் மரணமடைந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா தொற்று பாதித்து பலியாகும் நபர்களுக்கு, கொரோனா காரணமான மரணம் என இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படாததால், மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சக வழக்கறிஞர் கண்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவர் மூச்சுத்திணறலால் இறந்தார் என சான்று வழங்கப்பட்டதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கொரோனா மரணம் என இறப்பு சான்றிதழில் குறிப்பிடாததால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் அரசின் நிதியுதவி கிடைக்கப்பெறுவது தடைப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதுமே குறை கூறப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினர்.

கொரோனா நோயாளிகளின் இறப்பு சான்றிதழை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Hc Order To Inspect Covidpatient Death Certificate

தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனா பாசிடிவ் சான்றிதழ் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மரணங்களை கொரோனா மரணங்கள் என பதிவு செய்வதில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால் தான், எதிர்காலத்தில் தொற்று பரவலை சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும் எனவும், இறப்புகளை துல்லியமாக குறிப்பிடுவது, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டனர்.

இணை நோய்கள் உடையவர்களும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதால், கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.