ஓபிஎஸ் வழக்கு ...பச்சோந்தியான லஞ்சஒழிப்புத்துறை...கடுமையாக விமர்சித்த சென்னை உயர்நீதிமன்றம்
ஆட்சியாளர்களுக்கு ஏற்றாற்போல லஞ்சஒழிப்புத்துறை பச்சோந்தியாக மாறுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
பச்சோந்தியான லஞ்சஒழிப்புத்துறை
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஆட்சிக்கு வருபவர்களுக்கு ஏற்றாற்போல லஞ்சஒழிப்புத்துறை பச்சோந்தியாக மாறுகிறது என கடுமையாக விமர்சித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடும், ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடும் லஞ்சஒழிப்புத்துறை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
MP, MLA'க்களுக்கு சட்டம் பொருந்தாதா?
லஞ்சஒழிப்பு துறை என்பது யாருக்கும் சாதகமில்லாமல், நடுநிலையில் செயல்படவேண்டுமென சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே லஞ்சஒழிப்புத்துறையும், சிறப்பு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களும் நிறைவேறும் என அவர் தெரிவித்தார்.
எம்.பி, எம்.எல்.ஏ'க்கள் மீதான விசாரணையை மேற்கொள்ளும் போது சிறப்பு நீதிமன்றங்களில் காவல் துறையோ அல்லது லஞ்சஒழிப்பு துறையோ ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலை இருக்கும் பட்சத்தில், எம்.பி, எம்.எல்.ஏ'க்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவித்து விடலாமே என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.