சென்னை அணி தப்பிக்க இது ஒன்றே வழி...தோனிக்கு முன்னாள் வீரர் சொன்ன ஐடியா
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணி தப்பிக்க அந்த அணியின் முன்னால் வீரர் மேத்யூ ஹெய்டன் ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய 2022 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்றுள்ளது. லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளதால் எஞ்சியுள்ள 2 இடங்களுக்கு 6 அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது.
முன்னாள் சாம்பியன்களான சென்னை, மும்பை அணிகள் முதல் அணிகளாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதில் சென்னை அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் மும்பையுடன் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.
இதனிடையே சென்னை அணி அடுத்த ஆண்டு பலமாக திரும்ப வேண்டும் என்பதால் அணியை கட்டமைக்கும் பொறுப்பு தோனியின் கைகளில் தான் உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணி அடுத்த ஆண்டு சிக்கல்களில் இருந்து தப்பிக்க அந்த அணியின் முன்னால் வீரர் மேத்யூ ஹெய்டன் ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்றிருந்தாலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.40 வயதை தொட்ட ஒரு வீரர் இப்படி இளைஞனைப் போல விளையாடி வருவது பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது.
எனவே அடுத்த ஆண்டு தோனி ஓய்வினை அறிவிக்காமல் சென்னை அணிக்காக தொடர்ந்து கேப்டனாக விளையாட வேண்டும்.தோனி போன்ற ஒரு மிகப்பெரிய கேப்டன் தான் அணிக்கு நிலைத்தன்மையை கொண்டுவருவார் என மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்.