நான் தயாராக இருக்கேன்...பதவி குறித்து பரபரப்பாக பேசிய ஹர்திக் பாண்டியா..!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி.20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் உடன் மோதிய இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டியிலும்,வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில்,
இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
இந்தியா அணி அபார வெற்றி
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 64 ரன்களும், தீபக் ஹூடா 38 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிம்ரன் ஹெட்மயர் (56), ப்ரூக்ஸ் (13) மற்றும் டீவன் தாமஸ் (10) ஆகிய மூவரை தவிர,
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் வெளியேறியதால் 15.4 ஓவரில் 100 ரன்கள் மட்டுமே எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா அணி 4 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது.
மனம் திறந்த ஹர்திக் பாண்டியா
இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இந்த வெற்றி குறித்து பல்வேறு விஷயங்கள் பேசிய இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டன்சி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டால் அதை சரியாக செய்ய தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “இந்திய அணியை வழிநடத்த கிடைக்கும் வாய்ப்பே மிக சிறப்பானது.
அதிலும் கேப்டனாக இருந்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுப்பதும் சிறப்பானது. முன்னாள் கேப்டன்களின் வழியை தான் நானும் பின்பற்றுகிறேன்” என்றார்.
எதிர்காலத்தில் முழு நேர இந்திய கேப்டனாக நியமிக்கப்பட்டால் ஏற்று கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா “ஏன் கூடாது..?
எனக்கான வாய்ப்பு கிடைத்தால் அதை நிச்சயம் என்னால் முடிந்தவரையில் சிறப்பாக செய்து கொடுப்பேன். ஆனால் எங்களது தற்போதைய இலக்கு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும்,
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் தான், அதில் சிறப்பாக விளையாடுவதில் மட்டும் தான் தற்போது எங்கள் கவனத்தை செலுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.