‘இந்த பையன் நம்ம தேசிய அணியில இருக்குறது நமக்கு தான் பெருமை’ - ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!
நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் 15-வது சிசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஆண்டின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தினார். இதனை தொடர்ந்து அவரின் கேப்டன்சி திறமையை குறித்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே, “15-வது ஐ.பி.எல். தொடரில் என்னை பொறுத்தவரை சிறந்த தருணம் எதுவென்றால் குஜராத் அணி விளையாடிய விதம்தான். குறிப்பாக ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக வந்து கோப்பையை வென்றது, அவரது தனிப்பட்ட செயல்திறனில் சிறப்பாக செயல்பட்டதையே காட்டுகிறது.
மும்பை அணியிலிருந்து பிரிந்து சென்று புதிய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்றது எளிதான காரியம் அல்ல. ஹர்திக் மற்றும் அவரது சகோதரர் குர்ணால் பாண்டியா எனது அகாடமியில் சேர்ந்தனர்.
அங்கு ஹர்திக் பாண்டியா சுற்றி திரிந்துக்கொண்டிருப்பார், வலைகளுக்கு பின்னால் ஓடி பந்தை பிடிப்பார். அவரை அழைத்து வரும்படி குர்ணாலிடம் கூறினேன். அப்போது ஹர்திக் பாண்டியாவின் கண்களில் கிரிக்கெட் மீதான வேட்கை இருப்பதை பார்த்தேன்.
அவர் எல்லா நேரத்திலும் சிறப்பாக விளையாட விரும்புகிறார். முன்பு முப்பரிமாண வீரராக இருந்த ஹர்திக் தற்போது நான்கு பரிமான வீரராக மாறியுள்ளார் என்று நம்புகிறேன்.
அவர் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகியவற்றில் நன்றாக செயல்படுகிறார். கூடுதலாக தற்போது கேப்டன் பொறுப்பிலும் சிறப்பாக உள்ளார்.இதுபோன்ற திறமையான வீரர் தேசிய அணியில் இருப்பதை பற்றி நாம் பெருமைப்பட வேண்டும்.” என புகழ்ந்து பேசியுள்ளார்.