‘எல்லோரையும் ஆச்சரியப்படுத்திட்டாரு..இந்திய அணிக்கே கேப்டனா போகலாம்’ - ஹர்திக் பாண்டியா குறித்து மஞ்சரேகர் கருத்து!
தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் கடந்த மார்ச் 26-ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது.
வழக்கம் போல் 8 அணிகள் என்றில்லாமல் இந்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் என பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆஃப் சுற்றுக்கான ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இந்த சுற்றுகளின் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
அறிமுக தொடரிலேயே இறுதிப்போட்டி வரை வந்துள்ள குஜராத் அணி கோப்பையையும் வெல்ல வேண்டும் எனத் தீவிரமாக உள்ளது. மற்றொருபுறம் 2008-ம் ஆண்டுக்கு பிறகு 2-வது கோப்பையை வெல்ல ராஜஸ்தான் அணி முனைப்புடன் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.
இறுதிப் போட்டியில் களமிறங்கும் குஜராத் அணி முதல் சீசனே சாதிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. நடப்பு சீசனில் அதிக வெற்றி பெற்றுள்ள குஜராத் அணி, இந்த சீசனில் ராஜஸ்தான் அணியுடன் தோற்றதே இல்லை.
இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன்சியை ஹர்திக் பாண்டியா எளிமையாக கையாண்டிருப்பதாக க்ரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன்சியை ஹர்திக் பாண்டியா எளிமையாக கையாண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஒருவர் ஐபிஎல் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டால், அவர் இந்திய அணிக்கும் கேப்டன் ஆகலாம்” என கூறியுள்ளார்.
குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்க கூடிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக தனக்கு கொடுக்கப்படிருந்த பொறுப்பை மிகவும் அருமையாக கையாண்டுள்ளார் என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.