தோனியுடன் 10 வருடமாக பேசவில்லை; மரியாதை முக்கியம் - ஹர்பஜன் சிங்
தோனியுடன் பேசி 10 ஆண்டுகள் ஆகி விட்டது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்
இந்தியா அணியின் முக்கிய ஸ்பின்னராக இருந்தவர் ஹர்பஜன் சிங். தோனி தலைமையின் கீழ் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஆகிய இரு வெற்றிகளிலும் ஹர்பஜன் சிங் முக்கியப் பங்கு வகித்தார்.
இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
தோனி உடனான உறவு
இந்நிலையில் தோனி உடனான உறவு குறித்து ஹர்பஜன் சிங்கிடம் கேட்கப்பட்ட போது, "சிஎஸ்கே அணிக்காக இணைந்து விளையாடிய போது நானும் தோனியும் பேசி இருக்கிறோம். நாங்கள் பேசி 10 ஆண்டுகள் ஆகிறது.
சிஎஸ்கேவில் விளையாடும்போது கூட எங்கள் இருவருக்கும் உடனான பேச்சுவார்த்தை என்பது மைதானத்தில் மட்டுமே இருக்கும் அதை தாண்டி நாங்கள் பேசியது கிடையாது. எனக்கு தோனிக்கு எதிராக எதுவும் இல்லை, அவர் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், அவர் என்னிடம் சொல்லலாம். ஆனால் அவர் சொல்ல நினைத்திருந்தால், என்னிடம் சொல்லியிருப்பார்.
மரியாதை முக்கியம்
நான் இருமுறை பேச முயற்சித்தேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. நான் என் அழைப்பை எடுப்பவர்களை மட்டும் அழைப்பேன். நீங்கள் என்னை தொடர்பு கொண்டு அழைத்தால் நான் உங்களுடம் நட்புடன் இருப்பேன். ஒரு உறவில் மரியாதை என்பது மிக முக்கியம்.
நீங்கள் எனக்கும் மரியாதை கொடுத்தால், அதே மரியாதையை நான் உங்களுக்கு திருப்பி கொடுப்பேன், ஆனால் நான் கூப்பிடும் போது நீங்கள் பதில் அளிக்கவில்லை என்றால், அதன் பிறகு எனக்கு தேவையான போது தான் உங்களை சந்திப்பேன்" என கூறினார்.