தங்க நகை வாங்க போறீங்களா: இந்த குறியீடு ரொம்ப முக்கியம் - கவனம்!
தனித்துவ அடையாள எண் இல்லாத தங்க நகைகளுக்கு இன்று முதல் அனுமதி இல்லை என பிஐஎஸ் தெரிவித்துள்ளது.
HUID ஹால்மார்க்
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் HUID எனும் ஆறு இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை என இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எதற்காக என்பது குறித்து கோவையை சேர்ந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
அதில், “HUID எனும் தனித்துவமான அடையாளம் என்பது எண்கள் மற்றும் எழுத்துக்களை கொண்ட ஆறு இலக்க எண்ணெழுத்து குறியீடாகும். BIS-ல் பதிவு பெற்ற நகை விற்பனையாளர்கள் தாங்கள் தயாரித்த தங்க நகைகளை BIS-ல் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் மையங்களுக்கு அனுப்ப வேண்டும். ஹால்மார்க் மையங்கள் BIS வழங்கிய நடைமுறைகளை பின்பற்றி நகைகளில் தூய்மை தன்மையை பரிசோதித்து,
பிஐஎஸ்
உரிய தூய்மை தன்மை உறுதி செய்த பின்னரே நகைகளில் லேசர் மூலம் BIS முத்திரை, தங்கத்தின் தூய்மை மற்றும் HUID ஆகிய மூன்று கட்டாய குறியீடுகள் குறிக்கப்படுகிறது. நுகர்வோர் மற்றும் நகை வாங்குபவர்கள் BIS Care App என்னும் செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்க நகைகளின் உண்மை தன்மையை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த HUID குறியீட்டை வைத்து தங்கத்தின் தரம், தயாரிக்கப்பட்ட தொழிற்சாலை, விற்பனை செய்த நாள், எடை, விற்பனை செய்தவரின் விவரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். HUID கட்டாயம் என்பது குறித்து கடந்த ஜூலை மாதமே மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு கால அவகாசம் கொடுக்கப்பட்டுதான் தற்போது நடைமுறைக்கு வருகிறது.
நடவடிக்கை
HUID என்பது தங்க நகைக்கான ஆதர் எண் போன்றது. இனிமேல் இந்த குறியீடு இல்லாமல் தங்க நகையை விற்பனை செய்யக்கூடாது. இது சட்டவிரோதமாகும். HUID குறியீடு இல்லாமல் பொதுமக்கள் தங்க நகை வாங்கினால் அது நம்பகத்தன்மை இல்லாமலேயே இருக்கும் என்பது மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தங்க நகை வியாபாரிகள் HUID குறியீட்டுடன் தான் நகை விற்பனை செய்கின்றனரா? அல்லது தயாரிக்கின்றனரா? என்பது குறித்து தொடர்ந்து நாங்கள் ஆய்வு மேற்கொள்வோம். இதில் குளறுபடி இருந்தால் சம்மந்தப்பட்ட நகை விற்பனையாளர் மீதும் தயாரிப்பாளர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.