ஆதித்யா எல்-1 விண்கலம்: புத்தாண்டில் நடக்கப்போகும் முக்கிய நிகழ்வு - ISRO தலைவர் தகவல்!
ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
ஆதித்யா எல்-1
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ (ISRO).
இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள 'லாக்ரேஞ்ச்' புள்ளி-1ஐ சென்றடையும். பின்னர் அங்கிருந்து விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வரும் ஜனவரி 6ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் 'லாக்ரேஞ்ச்' புள்ளியில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
'லாக்ரேஞ்ச்' புள்ளி
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது "ஆதித்யா எல்-1 ஜனவரி 6ம் தேதி மாலை 4 மணிக்கு 'லாக்ரேஞ்ச்' புள்ளியை அடையும்.
தொடர்ந்து ஆதித்யா எல்-1 இஞ்ஜின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தைக் கொண்டு, ஒளிவட்டப் பாதை (Halo Orbit) எனப்படும் சுற்றுப்பாதையில் நுழைகிறது. '
லாக்ரேஞ்ச் புள்ளி' என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையை நடுநிலையாக்கும் ஒரு பகுதி. இருப்பினும் சந்திரன், செவ்வாய், வீனஸ் போன்ற பிற கோள்களின் தாக்கத்தால் முழுமையான நடுநிலைப்பகுதி என்பது இருக்காது" என்று அவர் தெரிவித்துள்ளார்.