நீங்கள் அறிவாலயத்தின் கைக்கூலிகள் - செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா வாக்குவாதம்..!
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றுக்காக ஆஜராக வந்த பிஜேபி முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவதுாறு பேச்சு வழக்கு
கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பிஜேபி சேர்ந்த எச்.ராஜா,
அறநிலையத்துறை அதிகாரிகள் மட்டும் அவர்கள் வீட்டின் பெண்களை அவதூறாக பேசியதாக இருக்கன்குடி மற்றும் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் அறநிலையத்துறை அதிகாரி ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இவ்வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஜேபி கட்சியைச் சேர்ந்த முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராவதற்க்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்திருந்தார்.
செய்தியாளர்களிடம் வாக்குவாதம்
அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்ட தனியார் தொலைக்காட்சி நிருபரை பார்த்து நீ யார் எதற்காக ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குகிறாய் ?நீங்கள் அனைவரும் அறிவாலயத்தின் கைக்கூலிகள் என்று பேசினார்.
தொடர்ந்து பேசுகையில் நான் சொல்வதைப் போடத்தான் நீங்கள் உள்ளீர்கள் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற தோணியில் பேசினார். இறுதியில் செய்தியாளர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பேச முற்படாத எச். ராஜா செய்தியாளரை சந்திப்பை முடித்துவிட்டு கிளம்பினார். தொடர்ந்து பலமுறை செய்தியாளர்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்ளும் எச். ராஜாவிற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.