குட்கா வழக்கு: ஸ்டாலின் உள்ளிட்ட 19 தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் - ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக ஸ்டாலின் உள்ளிட்ட 19 தி.மு.க எம்.எல்.ஏக்களளுக்கு பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனைத் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கில், நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது சென்னௌ உயர்நீதிமன்றம்.
எனினும் தவறுகளை களைத்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என தெரிவித்திருந்தது. இதையடுத்து, உரிமைக்குழு கூடி மீண்டும் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார்.
இந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு நடைபெற்றது. சட்டப்பேரவை செயலாளர் சார்பில் அரசின் மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்டார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உரிமைக்குழு சார்பில் ஆஜராகி வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீஸை ரத்து செய்து நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டுள்ளார்.