கன்னியாகுமரியை புரட்டிப் போட்ட வெள்ளம் - நாளை முக்கிய ரயில் ரத்து

guruvayurexpress kanyakumariflood
By Petchi Avudaiappan Nov 13, 2021 07:24 AM GMT
Report

சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்து வருகின்றது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்ததால் அந்த மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே அணைகளில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாறு, வள்ளியாறு, பழையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு போன்றவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து நாளை காலை 9 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நாகர்கோவிலில் இருந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.