திடீரென இடிந்து விழுந்த 22 மாடி கட்டிடம் : 6 பேரின் நிலை தெரியாததால் பதற்றம்
ஹரியானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் இருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் செக்டார் 109 பகுதியில் உள்ள 22 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 530 வீடுகள் உள்ள நிலையில் 430 குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று மாலை இந்த குடியிருப்பின் ஆறாவது தளம் இடியத் தொடங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து 4 தளங்களும் ஆட்டம் காண தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தளங்கள் இடிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், மீட்பு படையினரும் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு பணிகளை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்த கட்டடத்திற்குள் 6 பேர் சிக்கியுள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.