கின்னஸ் சாதனை படைக்க நாடு முழுவதும் 34,500 கி.மீ. சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட இளைஞர்கள்
பொது போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் 34,500 கிமீ தூரம் பயணித்து கின்னஸ் சாதனை படைப்பதற்காக பயணத்தை தொடங்கிய 2 இளைஞர்களை நேற்று பல்வேறு அமைப்புகள் வாழ்த்தி இருக்கின்றன. பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள் கோ.வை.திலீபன், ஜா.ஆடம்சன்ராஜ். பல்கலைக்கழகத்தில் ரயில் சுற்றுலா தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்கள் பொது போக்குவரத்து மூலம் நாடு முழுவதும் 34,500 கி.மீ. தூரம் பயணித்து கின்னஸ் சாதனை புரிய திட்டமிட்டிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்தி, வழியனுப்பும் விழா சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.
இந்நிகழ்ச்சியில், பயணத்தின்போது அவர்கள் கொண்டுசெல்ல இந்திய கடலோர காவல்படையின் கொடியை, அப்படையின் சென்னை பிரிவு கமாண்டென்ட் நா.சோமசுந்தரம் வழங்கினார்.

இது குறித்து அவர் பேசுகையில், 'கடலோர காவல் படை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இவர்களிடம் இந்த கொடி வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கான உணவு, தங்கும் வசதி, பயணம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்வதற்கான ஒருங்கிணைப்பு பணியை கடலோர காவல்படை மேற்கொள்ளும்' என்றார்.
கோ.வை.திலீபன், ஜா.ஆடம்சன் ராஜ் பேசுகையில், 'கொரோனாவால் சுற்றுலா முடங்கி இருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசல், காற்று மாசுவை குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, பொது போக்குவரத்து மூலம் இந்தியா முழுவதும் 34,500 கி.மீ. பயணம் செய்து, கின்னஸ் சாதனை புரிய திட்டமிட்டிருக்கிறோம்.
பயணத்தை புதுச்சேரியில் பிப்.7-ம் தேதி தொடங்க உள்ளோம். 8 விமானங்கள், 34 ரயில்கள், 18 பேருந்துகளில் பயணித்து ஏப்ரல் 17-ல் ராமநாதபுரத்தில் நிறைவு செய்ய இருக்கிறோம் என்றனர்.